Saturday 3 September 2016

இயற்கை எண்ணெய் - செக்கு எண்ணெய்



'வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு' என்ற பழமொழி முன்னாளில், வழக்கில் இருந்து வந்தது. அந்நாட்களில் எண்ணெய் என்பது உடலுக்கு ஒரு மருந்தாக இருந்தது. கடலை, எள், தேங்காய், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களைப் பயிரிட்டு, வீட்டு உபயோகத்திற்குப் போக எஞ்சியதை செக்கில் கொடுத்து எண்ணெயாக ஆட்டி வைத்துக் கொள்வார்கள்.
செக்கில் உள்ள செக்குக்கட்டை என்பது வாகை மரத்தால் செய்யப்படுகிறது. இது பூமிக்கு அடியில் 11அடி ஆழம் புதைக்கபட்டு பூமிக்கு வெளியே நான்கு அடி உயரம் உள்ளது.அதன் மேல் வைக்கப்படும் ஏழு அடி நீளம் உள்ள உழக்கை என்ற பகுதி வம்மர மரத்தால் தயாரிக்கப்படுகிறது. கொக்கிக்கட்டை என்ற பகுதி ஐந்து அடி நீளத்தில் கருவேல மரத்தில் செய்யப்படுகிறது. சுற்றி வரும் 22 அடி நீளமுள்ள வழம்பை என்ற பகுதி செய்வதற்கு வாகை மரம் உபயோகப்படுத்தப்படுகிறது.

எண்ணெய் எடுக்கும் நவீன இயந்திரங்கள் வந்த பிறகு செக்குகள் குறைந்து இன்று செக்குகளைக் காண்பதே அரிதாகி விட்டது.

இப்போது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் குறித்து பேசுகிறோம், ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்து கொள்கிறோம்
அதற்கான சிறந்த உதாரணம் சமையல் எண்ணெய்
ரீபைண்டு ஆயில், டபுள் ரீபைண்டு ஆயில் என்பது எல்லாம் உண்மையில் மனித ஆயுளை குறைக்கும் அல்லது குலைக்கும் எண்ணெய்களே .
இதெற்கெல்லாம் காரணம் பராம்பரியமான பல விஷயங்களை விட்டு விலகியிருப்பதுதான்.மரசெக்கில் அரைத்து எடுத்து உணவை உண்ட கடந்த தலைமுறைகூட எண்ணெய் பிரச்னை எதுவும் இல்லாமல் இருந்தது.ஆனால் இந்த தலைமுறை எண்ணெய் என்று எழுதியதை படித்தாலே ஏகப்பட்ட நோய்க்கு உள்ளாகிவருகிறது.
ஆகவே செக்கு எண்ணெய் உபயோகியுங்கள் என்று பொத்தாம் பொதுவாக தற்போது சொல்லிவருகின்றனர்.செக்கு எண்ணெய்க்கும்,மரச்செக்கு எண்ணெய்க்கும் பெரிய வித்தயாசம் உண்டு
இரும்புச்செக்கில் சுமார் 350டிகிரி வெப்பத்தில் அரைத்து தானியத்திலுள்ள உயிர்ச்சத்துக்கள் அனைத்தையும் கொலைசெய்துவிட்டு ஒரு மோசமான திரவமாக பிழிந்து எடுப்பதைத்தான் செக்கு எண்ணெய் என்றுகூறி பலபேர் விற்கிறார்கள்.இது எக்காலத்திலும் நம் உயிர் வளர்க்க உதவாது.பலபேர் செக்கு எண்ணெய் என்றால் அது மரச்செக்கு எண்ணெய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்,இது தவறு.
மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுது அதிகபட்சம் 35டிகிரி வெப்பம் மட்டுமே வரும்.இதில் உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையை இழப்பதில்லை.இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழு நன்மை வழங்கும் தாவர எண்ணெய்.
மரச்செக்கு எண்ணெய் விலை அதிகம்தான்,உயிரோட்டமுள்ள எண்ணெய் தயாரிக்க பக்குவம்,நேரம்,செலவு சற்று கூடுதலாகும்.ஏதோ ஒரு திரவத்தை தயாரிக்க மேற்ச்சொன்ன மூன்றுமே தேவையில்லை.மாத்திரை,மருந்து,துரித உணவு இவற்றின் விலையை ஒப்பிட்டால் ஆரோக்கியத்தை மட்டுமே அள்ளித்தரும் மரச்செக்கு எண்ணெயின் விலையை அதிகமாக உணரமாட்டேம்.
நம் முன்னோர்கள் செக்கில் பிழிந்தெடுக்கும் எண்ணெயை அப்படியே பயன்படுத்தினர். உடற்பயிற்சி முடிந்ததும் ஒரு கிண்ணம் நல்ல எண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் கடைப்பிடித்தனர். உணவுக்கு மட்டுமின்றி, குளியலுக்கும், மசாஜ் செய்யவும் நல்லெண்ணெய் பயன்படுத்தியதால், மூட்டுவலி பிரச்சினையின்றி வாழ்ந்தனர். அதனாலேயே, எள் எண்ணெய் என்பதற்குப் பதிலாக, நல்ல எண்ணெய் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் பல பாரம்பரிய முறைகளைக் கைவிடும் தற்போதைய சூழலில், மரத்திலான செக்கைப் பயன்படுத்தி, பாரம்பரிய முறையில் எண்ணெய் தயாரித்து விற்பவர்களை ஊக்குவித்து இயற்கை முறை விவசாயம் மற்றும் பழைய பாரம்பரிய முறையை மீட்டெடுக்க வேண்டும் .